வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். இதையொட்டி அங்கு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கு 1.8 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் ரோடுஷோவில் கலந்து கொள்ளும் அவர் பாஜக இளைஞர் பாசறை மாநாடு, கிறிஸ்தவ மத போதாகர்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து இரவு தாஜ்மலபார் ஹோட்டலில் தங்கும் அவர் நாளை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வந்து வந்தே பாரத் ரயில் திட்டம் உட்பட கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் உட்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பின்னர் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள பாஜக அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளத்தில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மற்றும் அவருடைய பாதுகாப்பு விவரம் கசிந்ததை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே மோடி நிகழ்ச்சி நடைபெறும் கொச்சியில் 2 ஆயிரம் போலீசாரும், திருவனந்தபுரத்தில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் வருகையை ஒட்டி இன்று மதியம் முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும்ம 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.







