மணிப்பூர் வீடியோ வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2மாதமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் , விதி 267ன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் ஐந்தாவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்ததாவது..
“ மணிப்பூரில் நடக்கும் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறோம்; மணிப்பூர் வன்முறை மற்றும் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் ” என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.







