சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் பிறந்த நாள் – பிரதமர் மோடி புகழாரம்..!

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி இருவரையும் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் ஆகியோர்களது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப்புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர். திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார். இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.