குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற ”தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்க வருவதால் முதுமலை யானைகள் முகாமில் வரும் 5-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து அப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து குட்டி யானைகளுடன் பொம்மன், பெள்ளி சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகை புரிந்து 2 பேரையும் பாராட்டினார். தொடர்ந்து நாடு முழுவதும் பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பொம்மன், பெள்ளி சந்தித்து பாராட்டுகள் பெற்றனர். இதனிடையே ஆகஸ்ட் 5-ம் தேதி திரெளபதி முர்மு முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு வர உள்ளார்.
இதற்காக அன்றைய தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பகல் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு 3.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குடியரசு தலைவர் வருகையை ஒட்டி முதுமலை யானைகள் முகாமில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக முதுமலை யானை முகாம் இன்று முதல் வரும் ஐந்தாம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.







