இந்தியாவின் 16-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு அமைதி காத்த இந்திய அரசியல் களம் மீண்டும் ஒன்னொரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டது. 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கும், காங்கிரஸ் தனது அரியணை கனவை உறுதி செய்வதற்கும் வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கின்றன. இதற்கிடையில், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், சந்திர சேகர்ராவ் உள்ளிட்ட தலைவர்களும் தங்களின் அரசியல் இருப்பை இந்திய அரசியலில் வலுவாக காலூன்ற வியூகம் அமைத்துள்ளனர். இதற்கிடையில், நடைபெற உள்ளது இந்தியாவின் 16-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். பாஜக – காங்கிரஸ் இதில் யாரின் வியூகம் வெற்றி பெறப்போகிறது என்பதை தீர்மானிக்கும் இடத்திற்கு 6 மாநில தலைவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.
இந்திய அரசியலில் 3 மாற்றங்கள்:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒப்பீட்டளவில் பார்க்கும் போது 2017 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தல் பாஜக – காங்கிரஸ் கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அரசியலில் முக்கியமான மூன்று மாற்றங்கள் நடந்துள்ளன. ஒன்று, டெல்லியில் மட்டுமே ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் அரசியலில் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சி செய்வது போலவே ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை ஆளுகிறது. இது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக உருவெடுக்க முடியாத அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது, 2021ல் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற வெற்றியும் தனித்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதாவது, 2017ல் குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது காங்கிரசிற்கு துணையாக இருந்தது. தற்போது காட்சிகள் மாறியுள்ளன. காரணம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தாவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் வெளியானதை பார்த்திருப்போம். அதன், நீட்சி குடியரசு தலைவர் தேர்தலிலும் எதிரொலித்தால், எதிர்க்கட்சிகள் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறுவது சற்று கடினமானதாக மாறும்.
மூன்றாவது, மம்தாவின் நிலையில் தான் தற்போது சந்திர சேகரராவும் இருக்கிறார். தெலுங்கானாவில் பாஜகவிற்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையே அரசியல் முரண்பாடு வெடித்துள்ளது.ஆனாலும், பாஜகவுக்கு எதிராக சந்திரசேகரராவ் பேசினாலும் கூட அவர் காங்கிரஸ் சார்பு நிலைப்பாட்டை வெளிப்படையாக இன்னும் எடுக்கவில்லை. அதாவது, முழுமையாக காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. இந்த மூன்று காரணிகள் அடிப்படையில் பார்க்கும் போது, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திர சேகரராவ் ஆகிய மூவரும் குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு துருவ நட்சத்திரமாகவே உள்ளனர்.
பெரும்பான்மையை இழந்த பாஜக:
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2017ம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக செலுத்திய செல்வாக்கு இந்த தேர்தலில் தொடர்வது சந்தேகமே. 2017 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 5.27 லட்சம் வாக்குகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருந்தது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் உதவியுடன் மேலும் 1.33 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், 5 மாநில தேர்ந்தல் முடிவு பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை சற்றுக் குறைத்துள்ளது. அதாவது, 5 மாநில தேர்தலுக்கு முன்பு குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு பெரும்பான்மையை விட 0.05 சதவீதம் வாக்குகள் மட்டுமே பாஜகவிற்கு குறைவாக இருந்தது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு இது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட எதிர்க்கட்சிகள் அதிக வாக்குகளை பெற வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் கூட, நிதிஷ் குமார், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவு பாஜகவுக்கு இருக்கிறது. இவர்கள், இருவரும் பீகார், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். அதனால், பாஜக உடன் நிதிஷ் குமாரும், ஜெகன் மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் சேரும் போது பாஜக கூட்டணி வலுவாக வாய்ப்பு உள்ளது. அதே போல, தமிழ்நாட்டில் பாஜக உடன் அதிமுக கூட்டணியில் உள்ளது. இதனால், அதிமுகவின் வாக்குகள் பாஜகவிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதிஷ், ஜெகன், நவின் பட்நாயக் உடன் அதிமுகவும் சேரும் போது பாஜக கூட்டணி வலுபெறவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு:
அதே சமயத்தில், குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதாவது, 2017ம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் ராம் நாத் கோவிந்திடம் அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னிறுத்தப்பட்ட மீரா குமார் தோல்வியடைந்தார். இருப்பினும் கூட அதிக வாக்குகளை அவர் பெற்றதையும் கவனிக்கலாம். பதிவான 10.69 மொத்த வாக்கில் மீரா குமார் 3.67 லட்சம் வாக்குகளை அவர் பெற்றார். 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த பின்னணியில், சிவசேனா, திமுக, டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதால் எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தற்போது வரை, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு இன்னும் வலுவாகவில்லை. இதனால், இது கடைசி நேரத்தில் மாற்றப்படவும் கூடும். எதிர்க்கட்சிகளே ஒன்றாக இணைந்து ஒரு வலுவான நபரை குடியரசு தலைவராக முன்னிருத்தினால் தான் எதிர்க்கட்சிகளின் வியூகம் வெற்றி பெறும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதனை, சோதனை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியால் சாத்தியமாக்க முடியுமா என்பதற்கான முன்னோட்டமாக குடியரசு தலைவர் தேர்தல் உள்ளது. அதே சமயம், மாநில எதிர்க்கட்சிகளை எப்படி கையாண்டு குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கப்போகிறது பாஜக என்பதையும் கூடுதல் கவனத்துடன் பார்க்க வேண்டி இருக்கிறது.