குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்துக்கு வரும் 17ம் தேதி செல்கிறார்.
வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் திரெளபதி முர்மு இங்கிலாந்தில் இருப்பார். அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் முர்மு, நமது நாட்டின் சார்பாகவும் இரங்கல் தெரிவிக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி இரவு உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இரண்டாம் எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர் பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வரும் 19-ந்தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.








