பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாகனம் பஞ்சாபில் நடு வழியில் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், இந்த விவகாரம் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்றும், சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை மீறிய செயல் என்றும் குற்றம் சாட்டினார். பிரதமரின் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்றும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் ஆஜரான மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் ஆஜராகிய பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் D.S.பட்வாலியா, இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதாகவும், இது குறித்து விசாரிக்க மாநில அரசு குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், பிரதமரின் பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
அனைத்து ஆவணங்களும் சீல் வைக்கப்பட வேண்டும் என்றும், இதற்குத் தேவையான உதவிகளை காவல்துறையும், சிறப்பு பாதுகாப்பு படையும் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.