மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து லாக்டவுனுக்கு மாநிலம் தயாராகி வருவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.19 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதுவரை 1.13 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 4.8 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 3.4 லட்சம் பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார்கள். இதற்கடுத்த இடத்தில் கேரளாவும், கர்நாடகாவும் உள்ளது. இந்த சூழலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் லாக்டவுனுக்கு தயாராகுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப், முதன்மை செயலாளர் சீதாராம் குண்டே, கொரோனா தடுப்பு பணிக்குழுவின் மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் உத்தவ் தாக்ரே கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதில் கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் அதிகரித்து வருவதாகவும், இதனால் இறப்புக்களும் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் முதல்வர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இது குறித்து கொரோனா தடுப்பு பணிக்குழு தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து “மகாராஷ்டிரா சுகாதார பாதிப்பில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது” என்று உத்தவ் தெரிவித்துள்ளார். இது மருத்துவ படுக்கைகள் மற்றும் மருந்துகளின் தேவையை பற்றாக்குறைக்கு உள்ளாக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை முடிந்தவரை நேரடியாக அணுகுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 3.75 லட்சம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள படுக்கைகள் உள்ளதாகவும், இதில் 1.07 லட்சம் படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பிரதீப் வயாஸ் தெரிவித்துள்ளார். மேலும், 60,349 ஆக்சிஸன் வசதியுள்ள படுக்கைகளில் 12,701 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் தற்போது வரை 54,073 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.