உத்தரபிரதேச மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜாவை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜா தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதில் அவரது ரசிகர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் 51வது பிரிவில் யூடியூபர் கவுர தனேஜாவின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். யூடியூபரை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
மேலும், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கான டோக்கன்களும் ரயில் நிலையத்தில் கீழ் வழங்கபட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும் தடை உத்தரவை மீறி செயல்பட்ட யூடியூபர் கவுரவ் தனேஜாவை பிரிவு 241 மற்றும் பிரிவு 188 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் காவலில் வைத்தனர். இரண்டு மணி நேரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட யூடியூபர் பின்னர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.