கள்ளக் காதலியின் மகளை 13 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த காவல் உதவி ஆய்வாளர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்புப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்த பெண், ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார். பெண் குழந்தைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு 13 வயது ஆகி உள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் தாயுடன் தகாத உறவில் இருந்த போது சிறுமிக்கு 13 வயதிலிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியிடம் அத்துமீறி பல முறை பாலியல் வன்கொடுமையும் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அந்தப் பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் அந்த பெண்ணை, காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் பாலியல் உறவுக்கு வருமாறு பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனைப் பொறுக்க முடியாத அந்த பெண் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது புகார் அளித்தார்.
இதனை விசாரணை செய்த வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த பெண் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் பலமுறை மிரட்டி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.








