தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் தமிழில் ட்வீட்

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைய சமுதாயத்தினர் அவரது படைப்பினை படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவராலும் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே.சாமிநாதர் 1855ம் ஆண்டு கும்பகோணத்துக்கு அருகே…

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைய சமுதாயத்தினர் அவரது படைப்பினை படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அனைவராலும் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே.சாமிநாதர் 1855ம் ஆண்டு கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் பிறந்தார். இவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணி ஏராளம். இவரது பணியினால் எத்தனையோ அழியும் விளிம்பில் இருந்த தமிழ் சுவடிகள் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர் செம்மொழி தமிழின் கருவூலங்கள் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவில் பதிப்பித்து அளித்தவர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். மேலும், தமிழ் விடு தூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்கால தலைமுறையினருக்கு இவர் கொண்டு சேர்த்தவர்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியவும் வாய்ப்பளித்தார். இவ்வாறு தமிழ் மொழிக்காக பல சேவைகளை செய்த இவரை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் உவேசாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

https://twitter.com/narendramodi/status/1494874608662552580

இந்நிலையில் உ.வே.சாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். ”தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்.

இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பில்லா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”, என அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.