தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காசியும் தமிழ்நாடும் பழமையான பாரம்பரியம் கொண்டது. காசியும் தமிழ்நாடும் சிவமயமானது, சக்திமயமானது. காசி வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. தேச ஒற்றுமையை வளர்க்கவே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி. உலகின் மிக பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழிக்கு இந்தியா தான் வீடு. இதற்காக பெருமை கொள்ளும் அதே நேரத்தில் தமிழ் மொழியை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம் என்ற பிரதமர், காசி தமிழ் சங்கமம் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத நினைவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.







