“புதிதாக 400 கிளைகள் திறக்க திட்டம்” – SBI தலைவர் தினேஷ் காரா பேட்டி

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை பாரத…

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது.  இந்த வங்கி நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.  இதனிடையே,  ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் 137 கிளைகளைத் திறந்தது.  அதில் 59 புதிய கிராமப்புற கிளைகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், நெட்வொர்க் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.  இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளதாவது,  “89 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகளும்,  98 சதவீத பரிவர்த்தனைகளும் கிளைக்கு வெளியே நடக்கிறது,  இனியும் கிளை தேவையா என்று என்னிடம் ஒருவர் கேட்டார்.  எனது பதில் ஆம்.  புதிய பகுதிகள் உருவாகி வருவதால் இது இன்னும் தேவைப்படுகிறது.

பெரும்பாலான ஆலோசனை போன்ற சில சேவைகளை கிளையில் இருந்து மட்டுமே வழங்க முடியும்.  வாய்ப்பு உள்ள இடங்களை நாங்கள் கண்டறிந்து,  அந்த இடங்களில், கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.  இந்த ஆண்டு கிட்டத்தட்ட 400 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.  மார்ச் 2024 நிலவரப்படி எஸ்பிஐ நாடு முழுவதும் 22,542 கிளைகளை கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.