ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்பு களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல்கட்ட தேர்தல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதில் 9 மாவட்டங்களில், உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. வரும் 12- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.