குறைவாக விநாயகர் சிலைகள் அமைக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நடப்பாண்டு…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில்
மட்டுமே விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நடப்பாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், சிலைகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த
இந்து முன்னேற்றக் கழகத் தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களிலும், சாலைகளிலும்,
பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் அனுமதியின்றி விநாயகர் சிலைகள்
வைக்கப்படுவதாகவும், அவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சட்டம் –
ஒழுங்கு பிரச்னைக்கும் காரணமாகிவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும்
வகுக்கப்படவில்லை எனவும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக இந்து
அமைப்புகள் நன்கொடை வசூலிப்பதையும் கண்காணிக்க வேண்டும் எனவும் மனுவில்
கோரப்பட்டுள்ளது.

அதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர்
சிலைகள் வைக்க வேண்டும் என இந்து அமைப்புகளை அறிவுறுத்தும்படி அரசுக்கு
உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.