திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நோக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்க கூடிய நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு, சுயநினைவு தவறிய நிலையில் இருப்பது போன்ற மனிதரின் பேச்சிற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டாம் என்று நினைக்கிறேன். கட்சியின் லட்சியங்களையும், கொள்கையையும் பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்று கூறினார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, ஏற்கனவே தனித்து போட்டியிட்டு உள்ளோம். எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம்.
ஒரு நாட்டிற்கு இரண்டு பலமான கட்சிகள் இருந்தால் தான் ஜனநாயகத்திற்கு நல்லது. திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். அதிக கூட்டணி இருந்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து பலம் இழந்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய ஒரு கூட்டணி இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும். நல்ல கூட்டணி தான் தலைமை யார் என்று தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எனக்கு யார் தலைமையில் கூட்டணி அமையும் என்று ஒரு அனுமானம் உள்ளது. அதன்படி செய்வோம்.
ஜெயலலிதா நினைவு தினத்தில் ஓ பி எஸ் உடன் சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு, அவர் சொன்னது போல் சந்திக்க நேர்ந்தால் சந்திப்பேன், திட்டமிட்ட சந்திப்பு என்று எதுவும் இல்லை என்றார்.
தொடரும் அரசு மருத்துவமனை உயிரிழப்பு குறித்த கேள்விக்கு, மருத்துவ துறை, தமிழ்நாடு அரசு, இதை கூடுதல் கவனம் எடுத்து கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை இதை இன்னும் கவனத்துடன் அணுக வேண்டும். ஏற்கனவே 17 வயது மாணவி பிரியா இறந்த போது, அமைச்சர் சொன்னார். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் கவனத்துடன் குழு அமைத்து செயல்படும் என்றார்.
அரசு மருத்துவமனை ஒரு சில மருத்துவர்களால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது போன்ற தவறுகள் நடப்பதை அரசு தொடர்ந்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்றார்.
ஆதார் கார்டு, மின் அட்டை இணைப்பு குறித்த கேள்விக்கு, இதற்கு மின்சாரத்துறை உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் அபராதம் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
எடப்பாடி , ஆளுநர் சந்திப்பு குறித்து, பொதுவாக, எடப்பாடி தலைமையில் உள்ள அணி பலம் இழந்து உள்ளது.சின்னம் கூட அவரிடம் இல்லை. கட்சி இருக்கிறது என்று காட்டி கொள்ள செய்கிறார். எதிர்கட்சி தலைவர் என்ற பதவியில் இருப்பதை காட்டிக்கொள்ள செய்து இருப்பார் என்பது தான் என் கருத்து என்றார்.
சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஏற்கனவே சின்னம் முடங்கி இருப்பது போல தான் இருக்கிறது. கட்சி விதிப்படி பொதுக்குழுவை கூட்டியது சரியா? தவறா? என்ற கேள்விக்கு தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியவில்லை. இதற்கு யார் தீர்வு காண முடியும் என்று கேட்ட போது கூட நான் சொன்னேன், யார் பன்னீர் செல்வத்தையும், எடப்பாடியையும் கையை பிடித்து ஆட்சி செய்ய வைத்தார்களோ அவர்களால் தான் முடியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.