வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
முத்துக்குமரனின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் தமிழக சிறுபான்மையினர் நலத் துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலகத் தமிழர்களுக்கான துறை இருக்கிறது – அங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதைப் பற்றி விழிப்புணர்வு வேண்டும். கடந்த ஆண்டில் 152 பேரும் – இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்தனர்.
அதேபோல் வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும் இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை முன் வைத்திருந்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.
இந்த துறையின் மூலமாக 181 பேரை குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு பணிக்காக அனுப்பி வைத்துள்ளோம் – இங்கிலாந்தில் இருந்து செவிலியர் பணிக்காக 500 பேர் கேட்கப்பட்டு இருக்கிறார்கள் – இதில் 481 பேர் பதிவு செய்து வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர்.
பல கிராமங்களில் உள்ள நிலங்கள் வஃபு வாரியத்திற்கு சொந்தம் என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு? சர்வே எண் விடுபட்டு கிராமத்தில் பெயர் மட்டும் போடப்பட்டு இருப்பதால் பல இடங்களில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் மறு அளவீடு செய்வதற்கு வஃபு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாகப் பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியமான ஒன்று. இதுகுறித்த விழிப்புணர்வு நமக்கு கட்டாயம் தேவை என்று செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.








