தேனி மாவட்டம் அருகே மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் பொதுமக்கள் புதைக்கும் அவல நிலை தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிக்கு உட்பட்டது புதூர் காலனி. இப்பகுதியில்
சுமார் 400க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். இங்கு
முறையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர். மேலும், 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வரும் இப்பகுதி மக்களுக்கு மயானம் இல்லை. இதனால் இவர்கள் உத்தமபாளையம் – மார்க்கயன்கோட்டை நெடுஞ்சாலை ஓரங்களில் இறந்தவர்களின் சடலங்களைப் புதைத்து வருகின்றனர். மேலும், உடல் புதைக்கப்பட்ட இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததால் நாய்கள் பறித்து விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து ஊர் மக்கள் சார்பில் மயானம் வேண்டி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சாலையோரத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் அவலம் இனிமேலும் நீடிக்கக் கூடாது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் , தேனி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்தப் பகுதியிலேயே அடக்கம் செய்து பழக்கப்பட்டதால் இந்தப் பகுதியிலேயே அரசாங்கம் எங்களுக்கு மயானம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா