சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே இருப்பது ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையேயான போராட்டம் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசி சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தங்கள் நாட்டின் அங்கம் தைவான் என சீனா கூறி வரும் நிலையில், தைவான் சீனாவின் அங்கம் அல்ல அது தனி நாடு என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் நான்சி பெலோசியின் பயணம் அமைந்துள்ளது.
தைவான் சென்றடைந்ததும் நான்சி பெலோசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தைவானின் துடிப்பான ஜனநாயகத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்தவே தான் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தைவான் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பெலோசியை, தைவான் அதிபர் சாய் இங்வென் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
பின்னர் பேசிய சாய் இங்வென், தைவானின் மிக முக்கிய நண்பர்களில் ஒருவர் பெலோசி என்றும், தைவானுக்கு அசைக்க முடியாத ஆதரவை அளித்துள்ள அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஜனநாயக நாடான தைவானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சாய் இங்வென் சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
தைவான் ஒருபோதும் அடிபணியாது என தெரிவித்த சாய், தங்கள் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.
இதையடுத்து நான்சி பெலோசி ஆற்றிய உரையில், அமெரிக்கா தான் அளித்த வாக்குறுதியை ஒருபோதும் கைவிடாது என்பதை தனது பயணம் உணர்த்தி இருப்பதாகக் குறிப்பிட்டார். தைவானுடனான நட்பை அமெரிக்கா பெருமையுடன் கருதுவதாகவும் அவர் கூறினார்.
முன் எப்போதும் இல்லாத அளவு, தைவானுடனான அமெரிக்காவின் நட்புணர்வு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சபாநாயகர், இந்த செய்தியை தான் தற்போது கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் தைவான் விஷயத்தில் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தைவானை சுற்றிலும் ராணுவ ஒத்திகைக்கு திட்டமிட்டுள்ளது.
இந்த அணிவகுப்பு தைவானின் எல்லையை ஊடுருவும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்சி பெலோசி சென்ற பிறகு வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ராணுவ ஒத்திகை நடைபெறும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தலை அடுத்து, தைவான் தனது ராணுவத்தை உஷார் படுத்தி உள்ளது.