பதஞ்சலியின் கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லையென தற்போது தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யோகா ஆசிரியரான பாபாராம்தேவ் நடத்தும் நிறுவனமான பதஞ்சலி, சமீபத்தில் கொரோனில் கிட் எனும் மருந்தினை கொரோனா தொற்றுக்கு எதிராக அறிமுகப்படுத்தியது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ராம்தேவ், கொரோனா தொற்றுக்கு எதிராக கொரோனில் கிட் எனும் மருந்து சிறப்பாக செயல்பட்டு கொரோனா வைரஸை அழித்துவிடும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த மருத்திற்கு உலக சுகாதார அமைப்பு (WHO GMP )அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராம்தேவ் கருத்தினை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் விளக்கம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “உலக சுகாதார அமைப்பு எந்த ஒரு பாரம்பரிய மருந்தினையும் கொரோனா தொற்றுக்கு எதிராக மதிப்பாய்வு செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை” என கூறியுள்ளது.
சுகாதார அமைப்பின் இந்த கருத்தானது கொரோனில் கிட் மருந்து குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.







