நடுவானில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரியை, சக பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ஆம் தேதி அன்று சிட்னியில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே இருக்கையை மாற்றிக்கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பயணி , விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியை கன்னத்தில் அறைந்துள்ளார்.
விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியை சக பயணி அறைந்த சம்பவம் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஜூலை 9, 2023 அன்று சிட்னியில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட ஏ1-301 விமானத்தில் பயணி ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, எச்சரிக்கைகளை மீறி நடந்து கொண்டார். இந்த நிகழ்வு விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது. இதில் எங்கள் ஊழியர் ஒருவரும் அடங்குவார். விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியதும், பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இவ்வாறு ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







