திருச்சி மாவட்டம் நரசிங்கபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் மணல் கடத்தியவர்களை தட்டிக்கேட்ட வருவாய் ஆய்வாளரின் மண்டையை ஊராட்சி மன்ற தலைவர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது.இங்கு அதிகளவில் செம்மண் இருக்கிறது.இதனால் விஷமிகள் செம்மணை திருடி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுக்க வலியுறுத்தி அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.எனவே துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் இரவு நேரங்களில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக கள ஆய்வு நடத்த சென்றார்.
அப்போது அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன்,அவரை தாக்க முயன்றுள்ளனர்.மேலும் பிரபாகரன் அரசு புறம்போக்கு நிலத்தில் எப்படி மணல் அள்ளலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு அவரின் மண்டையை அடித்து உடைத்துள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ஐ பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலண்ஸ் மூலமாக அனுப்பி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர்,ஜேசிபி ஓனர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேந்தன்