1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 2 நிவாரண ரயில்கள் மற்றும் 7க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களுடன் வரும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த கோர விபத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 7க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 நிவாரண ரயில்கள் , சாலை போக்குவரத்து மற்றும் ரயில்வே துறைக்கு சொந்தமான 4 கிரேன்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் கிழக்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சௌத்ரி தெரிவித்துள்ளதாவது..
“ விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் ரயில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் சீரமைப்பு பணிகளை முடிப்போம்” என தெரிவித்துள்ளார்.