துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கரமான நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 11 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர் உயிருடனும் மீட்கப்பட்டு வருகின்றனர். சனிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில், துருக்கியில் 39,672 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
-ம.பவித்ரா