வழக்குகளின் உத்தரவுகளை நீதிமன்ற வலைதளத்தில் உடனடியாகப் பதிவேற்ற உத்தரவு!

கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் ecourts.gov.in பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபாகரன், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய…

கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் ecourts.gov.in பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பிரபாகரன், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாக
போதை தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பிரபாகரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி, இவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.

மீண்டும் பிரபாகரன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அந்த மனு தள்ளுபடி ஆனதால், மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பழைய விவரங்களை மறைத்து புதிதாக மனு தாக்கல் செய்வது போல் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணை செய்த நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் நீதிபதி புகழேந்திக்கு தெரிவிக்கப்பட்டு பிரபாகரன் வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக மீண்டும் பட்டியல் இடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி புகழேந்தி நீதிமன்ற உத்தரவுகளை முறையாக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாததால் வழக்கின் பழைய நிலையை மறைத்து புதிய உத்தரவுகள் பெறப்படுகின்றன. குறிப்பாக, ஜாமின் மனுக்கள், முன்ஜாமின் மனுக்கள் மற்றும் தீர்ப்புகளை  உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் ecourts.gov.in பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.