ஓபிஎஸ் பேனர் கிழிப்பு: அதிமுக கண்டனம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் யாருக்குச்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதே புரியாத அளவில் நடந்து முடிந்தது. அடுத்த பொதுக்குழு கூடும்போது இபிஎஸ்-தான் ஒற்றைத்தலையை ஏற்பார் எனச் சிலர் கூறிவந்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் இபிஎஸ் உருவ பொம்மை கொளுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 – திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் – எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நடைபெற உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல” என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் எந்த விதமான ஒப்புதலையும் அளிக்கவில்லை என அவர் கூறி இருந்தார்.

அண்மைச் செய்தி: ‘ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்; பரிந்துரைகளை அளித்தது குழு’

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10.00 அளவில் தொடங்கியது. அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உள்ள ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளித்த தலைமை, மீண்டும் ஓபிஎஸ் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தொண்டர்கள் சிலர் ஆவேசத்துடன் நடந்து கொண்டனர். உடனடியாக கிழிக்கப்பட்ட பேனர் மீண்டும் சரி செய்யப்படும். அவர் செய்தது தவறு, கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.