ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுநருக்கு விளக்கியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர சட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 19ந்தேதி சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் சட்டமசோதா இயற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர், சட்டமசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.இது தொடர்பாக சர்ச்சை உண்டான நிலையில், ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அமைச்சர் ரகுபதி முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்ட அமைச்சர் ரகுபதி சென்னை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார். அப்போது, உள்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களும் உடன் இருந்தனர். சந்திப்பில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுநருக்கு விளக்கினோம். ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
அவரச சட்டத்திற்கு அரசாணை போடப்படவில்லை என்று விளக்கிய அமைச்சர், “நிரந்தர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக சட்டம் அமலுக்கு வரும். ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் எதுவும் கிடையாது.இதுவரை 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன” என்று விளக்கினார்.