ஆன்லைன் கடன் செயலி விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்
பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “பிரதமர் கூறியது போல் தற்போது நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ரிசர்வ் வங்கி தற்போது வங்கிகள் அல்லாத நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வங்கிகளில் முன்பு கடன் பெற வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்து, ஆவணங்கள் சமர்ப்பித்து வங்கிக்கு நேரடியாக சென்று பலமுறை
அலைந்து கடன் பெற வேண்டும். ஆனால் தற்போது நமது ஸ்மார்ட் போன் மூலமாக விரைவாக கடன் பெற முடிகிறது. தற்போது பல்வேறு பணம் இருக்கும் நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் செயலிகளை உருவாக்கி அதன் மூலம் கடன்களை வழங்கி வருகின்றனர். ஸ்மார்ட் போன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதை நம்பி பலர் தங்களது பணம், சொத்து ஆகியவற்றை இழக்கின்றனர்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், பொருளாதார நெருக்கடியில்
உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்களை குறி வைத்து இது போன்ற கடன் செயலி மோசடி நடைபெறுகிறது. O% வட்டி என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வங்கிகள் போன்றே தனது இணையதள பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர். போலியான ஸ்மார்ட் போன் கடன் செயலிகளை உருவாக்கி அதிக வட்டி, தேவை இல்லாத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதித்து ஸ்மார்ட் போன் செயலி மூலம் கடன் பெறுபவரின் மொபைலில் உள்ள தொடர்புகள் பட்டியல் (Contact List) புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.
இதை வைத்து தவறுதலாக பயன்படுத்தி கடன் பெறுபவர்களை அச்சுறுத்துகின்றனர். கடன் பெரும் தொகையை விட பல மடங்கு அதிகமான தொகையை வசூல் செய்கின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதக் கின்றனர். இந்தியா முழுவதும் இது போன்ற நிதி குற்றம் அதிகமாகிறது. கடன் செயலிகளான Kissht, KreditBee, Paytm, Stashfin, One Card, Early Salary, Slice, Zest Money, Cashe Personal Loan App, Money View போன்ற கடன் தரும் செய்திகள் கூகுள் ஆப் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
கடன் செயலிகள் மூலம் கடன் பெறுபவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்களை
மொபைலிருந்து திருடி புகைப்படங்களை ஆபாசமாக மாப்பிங் செய்து கடன் பெற்றவரின் தொடர்பு எண்களுக்கு அனுப்புகின்றனர். இதனால் பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது மிகத் தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனை தடுக்க கடன் செயிகளுக்கு பதிவு எண் வழங்கவும், விதிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கடன் செயலிகளை அனுமதிக்கும் போது அதற்கு சில விதிமுறைகள் உருவாக்கவும், பதிவு எண்கள் வழங்கவும் உத்திரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், மத்திய நிதி மற்றும் செலவீனத்துறை செயலர், இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்