தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் இன்றே வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
”இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த சட்ட முன்முடிவை தமிழ்நாட்டில் உள்ள பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டனி கட்சிகள் உள்ளிட்டோர் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா நிறைவேறியதாக சபநாயாகர் அப்பாவு அறிவித்தார்.
இரண்டாவது முறையாக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டாம் முறை சட்ட மன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பது விதியாகும்.
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக பெரும்பான்மையான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் இந்த ஒப்புதலை அளித்துள்ளார். “ ஆன்லைன் ரம்மியால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கான தீர்மானத்திற்கு நல்விளைவாக இன்று மாலை ஆளுநர் ஆன்லைன் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இந்த சட்டமானது இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







