சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு ஒரு வருடத்திற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இலங்கை அரசின் அனுமதியுடன் சீன ஆராய்ச்சி கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக சீன அரசு உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 5 – ஆம் தேதி முதல் மே இறுதி வரை சீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3 தென் இந்தியப் பெருங்கடலில் ஆய்வு நடத்த இருந்தது. இதற்கும் ஆரம்பம் முதலே இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு தளவாட ஆதரவு தர முன்வந்து ஒப்புதலும் அளித்தன. அதோடு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி இவ்விவகாரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சீன கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆய்வு செய்ய இலங்கை அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு ஒரு வருடத்திற்கு தடை விதித்து இலங்கை அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக சீன கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆய்வு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.