தேனி அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 73 வயதான சீதாலட்சுமி. இவர், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். உயிரிழந்தவருக்கு சடங்கு செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மயானத்தில் தேன்கூடு ஒன்று இருந்துள்ளது.
அதில் இருந்த தேனீக்கள் திடீரென அங்கிருந்தவர்களை தாக்கின. இதனால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும், தேனீக்கள் தாக்கியதில் பலர் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







