ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் குரங்குகளுக்கு பக்தர்கள் விருந்து அளிக்கும் விநோத வழிபாடு நடைபெற்றது.
கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாள மக்களும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
.அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக மக்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையின் கடைசி நாளான திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் சத்யா எனப்படும் விருந்து பரிமாறப்படுவது வழக்கம். இந்நிலையில் கொச்சியின் சாஸ்தாம்கோட்டா என்ற இடத்திலுள்ள தர்ம சாஸ்தா கோயிலில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு விருந்து வழங்குவது வழக்கம்.
இதனையொட்டி, கோயிலில் வாழை இலையில் பந்தியில் உணவு பரிமாறுவது போன்று பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகள் குரங்குகளுக்கு பரிமாறப்பட்டது. பந்தியில் உணவு பரிமாறும்வரை பொறுமை காத்த குரங்குகள், கடைசியில் அவைகள் கீழே இறங்கி வந்து விருந்தை ருசித்து சாப்பிட்டன. இந்தக் காட்சியை மிக அருகில் நின்று ஏராளமனோர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.







