சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு , ஓமலூரில் சத்துணவு கண்காட்சி
மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றது – கிராமப்புற பெண்கள் மூதாட்டிகள்
சத்தான உணவுகளை காட்சிப்படுத்தி அசத்தினர்.
சேலம் மாவட்டம் , ஓமலூரில் கேட்வே ஊரக மேம்பாட்டு அறக்கட்டளை, ஊரக பெண்கள்
மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் ஓமலூர் வட்டார மகளிர் சுய உதவி குழுக்கள் இணைந்து, சர்வதேச மகளிர் தினவிழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக
பெண்கள் விழிப்புணர்வு மற்றும் புத்துணர்வு போட்டிகளை நடத்தியது. இதில்,
கோலப்போட்டிகள், இசை நாற்காலி மற்றும் சத்துணவு சமைக்கும் போட்டிகள்
நடைபெற்றது.
இதில், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு வனவிலங்கு, பறவைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பை வலியுறுத்தி , பல்வேறு வகையிலான கோலங்களை பெண்கள் வரைந்தனர். இதனை தொடர்ந்து , சத்துணவு போட்டிகள் நடைபெற்றது.இதில்,சிறு தானியங்களை மக்கள் அதிகமாக சாப்பிட வேண்டுமென்று, சிறு தானியங்களில் செய்த சத்துணவுகள்
காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக ராகி, கம்பு, சாமை, திணை, குதிரைவாளி, கொள்ளு மற்றும் பச்சைபயிர் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் உணவுகள் சமைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் கொழுக்கட்டை, இலை கட்டை, புட்டு, கூல், மாங்காய் வடு, திணை பாயசம், கம்பு அடை, ராகி இனிப்பு பலகாரங்கள், ராகி பாயசம், குதிரைவாளி லட்டு, கீரையில் செய்த உணவுகள், கீரை பொரியல்கள் போன்ற பல்வேறு உணவு வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த காட்சியை பேரூராட்சி தலைவர் செல்வராணி, துணை தலைவர் புஷ்பா மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், உணவு கண்காட்சியை பார்க்க வந்த மக்கள் அனைவருக்கும் சத்துணவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்படும் என்று, மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கு.பாலமுருகன்