100 வயதைக் கடந்த மூதாட்டி தனது பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என மூன்று தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடினர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் காந்தி நகரில் வசிப்பவர்
ஜெயலட்சுமி 1923 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 100 வயது முடிந்து குடும்பத்தினர்
பிறந்தநாள் கொண்டாடினர். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பக் காலத்தில்
பட்டு சேலை நெய்து வந்தார். கடந்த சில வருடங்களாகப் பட்டுச் சேலை நெய்வதற்குத்
தேவையான பட்டு நூலைத் தார் சுற்றிக் கொடுத்து வருகிறார்.
இவர் திருவட்டத்தில் பட்டு நூலைச் சுற்றும் வேகமே பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறது. தனது வேலைகளைத் தானே பார்த்து வரும் இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகளான கோமதி வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இவருக்குப் பேத்தி பேரன்கள் என 12 பேரும் கொள்ளு பேத்தி கொள்ளு பேரன் என 19 பேரும் எள்ளுப்பேரன் என நான்குபேரும் மொத்தம் 35 பேர்கள் உள்ளனர்.
ஆரம்பக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தற்போது பகவத்கீதை போன்ற ஆன்மீக புத்தகங்களைப் படித்து வருகிறார். சைவ உணவுகளை மட்டும் உண்டு வரும் இவர் வீட்டில் தயாரிக்கும் எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடக்கூடியவர். தனக்காக இந்த உணவு தான் வேண்டும் அந்த உணவு தான் வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்.
இவர் மற்றவர்களைப் போல் நன்றாகப் பேசுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதும் சமையல் வேலைகளையும் ஆர்வமுடன் செய்ய முற்படுவதும் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இதே ஊரில் இவரது சகோதரி கௌசல்யா (வயது 80) நலமுடன் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூறு வயதைக் கடந்தாலும் சுறுசுறுப்பாக உள்ள ஜெயலட்சுமியை அந்தப் பகுதி மக்கள் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.







