ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக கேமராவைக் கொண்டு ஒரு கையை மட்டும் பயன்படுத்தி போட்டோ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி நாச்சினம்பட்டி என்ற கிராமப்
பகுதியில் சிறிய அளவிலான கவிதா ஸ்டுடியோ என்ற போட்டோ எடுக்கும் ஸ்டுடியோவை ஆரம்பித்து கடந்த 25 ஆண்டுகளாக போட்டோ எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் சத்தியபாமா. இவர் போட்டோ எடுக்கும் ஸ்டைலே தனி. ஒரு கையை மட்டும் பயன்படுத்தி போட்டோ எடுத்து வருகிறார். இவரது கணவர் பெயர் விஜயகுமார். இவர்களுக்கு மணி என்று ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்போது இவர் மட்டுமே ஸ்டுடியோவை கவனித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் போட்டோ எடுக்கும் பணியை
மேற்கொள்ளும்பொழுது ஒரு கையை மட்டும் பயன்படுத்தி ஸ்டைலாக போட்டோ எடுத்துள்ளார். இதை பக்கத்தில் இருந்தவர் தன் செல்போனில் வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து மூதாட்டி சத்தியபாமாவிடம் கேட்டபோது, எனது குடும்பத்தைக்
காக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு போட்டோ எடுக்கும் பணியைத் தொடங்கினேன்.
நான் எப்பொழுதும் அது போன்று தான் போட்டோ எடுப்பேன். எதேர்ச்சியாக
என்னை படம் பிடித்து சமூக வலைதளங்களில் யாரோ வெளியிட்டுள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மேலும் அவர் கூறும்பொழுது, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு போட்டோ எடுப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிய பின் திடீரென எனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் அப்பொழுது போட்டோ எடுக்க தெரியாது. அப்பொழுது பிலிம் ரோல்
பயன்படுத்தி போட்டோ எடுக்கும் காலம். வேறு வழி இல்லாமல் நானே ஃபிலிம் ரோல்
போட்டு மஞ்சள் நீராட்டு விழா நடத்தும் இடத்திற்கு சென்று எனக்குத் தெரிந்த
அளவில் போட்டோக்களை எடுத்தேன். இதில் பத்து போட்டோக்கள் மட்டுமே வீணானது மற்ற போட்டோக்கள் நன்கு வந்தது. அதைத்தொடர்ந்து அன்றே தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வந்த போலீசார் ஒரு கொலை நடந்த சம்பவத்தை போட்டோ எடுக்க வேண்டும் என கூறினர். வேறு வழியில்லாமல் நானே அங்கு சென்று கொலை நடந்த சம்பவத்தை போட்டோவாக எடுத்துக் கொடுத்தேன்.
அந்த போட்டோவை பார்த்த போலீசார் இனி நீங்களே போட்டோ எடுத்துக் கொடுங்கள். நன்றாக உள்ளது என பாராட்டினர். இதைத்தொடர்ந்து, அதற்கு பின்பு வந்த அனைத்து நிகழ்வுகளையும் போட்டோக்கள் எடுத்துக் கொடுத்துள்ளேன். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள், வளைகாப்புகள், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட விசேஷங்களுக்கு போட்டோக்கள் எடுத்துள்ளேன். உள்ளூரில் மட்டுமல்லாமல் கேரளா, திருப்பதி, திருச்செந்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் சென்று போட்டோக்கள் எடுத்துள்ளேன். காவல் துறைக்காக பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களையும் போட்டோக்களாக எடுத்துக் கொடுத்துள்ளேன். இதற்கு சாட்சியாக பல நீதிமன்றங்களுக்குச் சென்று சாட்சியும் கூறி உள்ளேன்.
என் குடும்ப வறுமையின் காரணமாக இந்தத் தொழிலை நான் மேற்கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேமராக்கள் முதல் தற்போது உள்ள கேமராக்கள் வரை அனைத்து கேமராக்களையும் பயன்படுத்தி போட்டோ எடுக்கத் தெரியும். இதற்காக தனியாக எதையும் படிக்கவில்லை ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் உடனடியாக அதேபோன்று போட்டோ எடுப்பேன். நான் எப்பொழுதும் ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி போட்டோ எடுப்பேன். இதை யாரோ படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் ஏராளமானவர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
-ம.பவித்ரா