மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி உறுதி செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விவகாரம் தொடர்பாக இன்று விரிவான உத்தரவை பிறப்பித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு இறுதியானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் நீதித்துறை தற்போதைய நிலையில் தலையீடு செய்து மாற்றம் கொண்டு வந்தால் அது மருத்துவ கலந்தாய்வை மேலும் தாமதப்படுத்தும் என்பதையும், கொரோனா காலத்தில் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே, இந்தாண்டு மட்டும் 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான இறுதி விசாரணை, மார்ச் 13ம் தேதி நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.