பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் மனுக்களை பெற உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவல் நிலையத்தில் முறையிட்டு தீர்க்கப்படாத பிரச்னைகள், காவலர்கள் மீதே எழும் புகார்கள் குறித்தும் முறையிட எளிய வழிகள் பிறக்காதா என்ற கேள்வி நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அதோடு ஊரின் குறைகளையும் பிரச்னைகளையும் களையும் காவலர்களின் பிரச்னைகளை யாரிடம் கூறுவது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்து வந்தது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளதுள்ளது.
இது தொடர்பாக டிஜிபி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காவல் துறை தலைமை இயக்குனர், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை, திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 11.30 மணிக்கு நேரில் சந்தித்து மனுக்களை பெறுகிறார். மனுக்களை பெறும் இடம் பார்வையாளர்கள் அறை. மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







