ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடைந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில், ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்திலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களைக் களையும் வண்ணம் கொள்கைகளை மேம்படுத்துதல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும், அதன்படி தான் திட்டமிடுகிறோம், செயல்படுத்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும், பிறரை சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இந்த அரசு கருதுகிறது” என்று தெரிவித்தார்.
அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வல்லுநர் குழு அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று எடுத்துரைத்த முதலமைச்சர், “மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கியின் உதவியுடன் தொடங்கப்பட உள்ளது. அடுத்த 6 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தற்போதைய திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர துறைகளுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்படும். சமூக பதிவு அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூக பாதுகாப்பு பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல், வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும்” என்றார்.
ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மன வருத்தம் அடைந்து விடக்கூடாது என்றும், ஒரே ஒருவருக்கு நல்லது என்றாலும் அந்த செயலை நாம் செய்தாக வேண்டும் குறிப்பிட்ட அவர், மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க, பாடுபட என்றைக்கும் துணையாக நிற்போம் என்றும் உறுதியளித்தார்.