துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டதாகவும், இனி வரும் காலங்களில் பயன்படுத்தப்படாது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிச.31 அன்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டபோது, பயிற்சி மையத்தில் இருந்து பறந்து சென்ற ஒரு குண்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது.
அதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் உயர் சிகிச்சைக்காக தஞ்சைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுவன் புகழேந்தி உள்ளார்.
இதனிடையே, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததைக் கண்டித்தும், நீதி கேட்டும் சிறுவனின் உறவினர்கள் புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மா சத்திரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக தமிழக அரசு மூட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், CISF வீரர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடக்கோரி புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் தமிழ்நாடு அரசு தரப்பில், “கடந்த டிசம்பர் 30ம் தேதியே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது.” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது உத்தரவிட்டது.