தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலைவாணர் அரங்க வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் என்ற சட்டமுன்வடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது ஒரு ஜனநாயக படுகொலை எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சங்க தலைவர்களின் பதவி காலத்தை 5 ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சென்னையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை என கூறிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மழை வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு உணவு வழங்கிய அம்மா உணவகத்தை மூடினால் என்ன என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது வேதனை அளிப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தரமற்ற முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
வடமாநிலங்களில் இருந்து பொங்கல் தொகுப்பு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், மஞ்சப்பை அறிமுகம் செய்துவிட்டு, நெகிழிப் பைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வந்துள்ளதாகவும் அவர் குற்றம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என போராட்டம் நடத்திய ஸ்டாலின், ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயரும்போது டாஸ்மாக் கடைகளை இன்னும் மூடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.