பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் எதுவும் கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இந்தப் பணிக்கு
நேர்காணல் எதுவும் கிடையாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், விண்ணப்பித்தவர்கள் வேறு விதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம்
என்றும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2021 டிசம்பர் 8 முதல் 13ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ஆம் தேதி ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை
2022 மார்ச் 11 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய
அறிவுறுத்தப்பட்டது.
பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள்
அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு
பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான
பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது முதல் கட்டமாக Textile Technology, Production Engineering,
Printing Technology, Physics, Chemistry, English மற்றும் Mathematics ஆகியப்
பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வேலைக்கு
விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு
நடத்தப்படும். மற்றப் பாடங்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான கடிதங்களை 14ஆம் தேதி முதல் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.
இந்தப் பணித் தேர்விற்கு நேர்காணல் எதுவும் கிடையாது. இந்தப் பணிக்கு போட்டி
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் , கூடுதல் கல்வித் தகுதிக்கான
மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவச் சான்றின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வுகள் எதுவும் கிடையாது.
மேலும், விண்ணப்பித்தவர்கள் வேறுவிதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம்
என்றும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








