என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி என்எல்சி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தொழில் தகராறு சட்டத்தின் படி உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பேச்சுவார்த்தைக்கு நியமிக்க முடியாது என என்.எல்.சி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
நீதிமன்ற நிவாரணத்தை எதிர்பார்த்து போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.
மேலும், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு மத்திய அரசு முடிவெடுக்கும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என தொழிலாளர் சங்கத்தினருக்கு நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என என்.எல்.சி.-க்கும் நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், அணு மின் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முறைகளை கையாள வேண்டும். காவிரி நதி மீது சூரிய மின்சக்தி ஆலைகளை அமைத்தால் என்.எல்.சி-இல் இருந்து கிடைக்கும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும். அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் எதிர்பார்த்து இருக்கிறது. இவ்வாறு நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்தார்.







