வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வளர்ந்த நாடுகளில் தற்போது உள்ள பொருளாதார நிலைமையைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நேற்று முன் தினம் மக்களவையில் நடைபெற்ற நிலையில்…

வளர்ந்த நாடுகளில் தற்போது உள்ள பொருளாதார நிலைமையைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நேற்று முன் தினம் மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசினார்.

விலைவாசி உயர்வை அரசு மறுக்கவில்லை என்று கூறிய நிர்மலா சீதாராமன், சர்வதேச அளவில் எழுந்த பிரச்சனைகள் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார். விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தைக் கண்டு மத்திய அரசு ஓடி ஒளியவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிர நடவடிக்கை  எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இந்தியாவின் பண வீக்க விகிதம் வங்கதேசத்தை விட மோசமாக இருந்ததை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், தற்போது இந்தியாவில் தனி நபர் வருமானம் வங்கதேசத்தில் உள்ள தனி நபர் வருமானத்தைவிட அதிகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

வளர்ந்த நாடுகளில் நிலவும் பொருளாதார தேக்கநிலையை சுட்டிக்காட்டி பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில வளர்ந்த நாடுகளில் தற்போது உள்ள பொருளாதார நிலையைவிட தற்போது இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்ந்துகொண்டிருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் கூறினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.