நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில், தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் 2,57,057 எண்ணிக்கையை கொண்டுள்ளது. இருப்பினும், தொற்று தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும், அதே போல அரசியல், கலாச்சார, மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை பொறுத்த அளவில், உள்ளரங்கு நிகழ்வுகளில் 50 நபர்களும், வெளியரங்க நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் 30 வரை மூடியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவிகிதமான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் குறித்து அம்மாநில முதல்வர் தனது கவலையை தெரிவித்திருந்தார். தற்போது இம்மாநிலத்தில் உள்ள 85 சதவிகித கொரோனா நோயாளிகள், பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







