சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனை

சிவகங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் தொடர்பில் இருந்ததாக கூறி இளைஞர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புத்தகங்கள், ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர்…

சிவகங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் தொடர்பில் இருந்ததாக கூறி இளைஞர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புத்தகங்கள், ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கார் ஓட்டுநராக
பணிபுரிந்து வருவதுடன் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் வீட்டில் இன்று அதிகாலை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை
மேற்கொண்டனர்.

அதில் வீட்டில் வைத்திருந்த சில புத்தகங்கள் மற்றும் ஆவனங்களை எடுத்து சென்றனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது உள்ளூர் காவல் துறையினரும் உடனிருந்தனர். அதிகாலையில் துவங்கப்பட்ட இந்த சோதனை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. என்ஐஏ அதிகாரிகளின் இந்த திடீர்
சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் தங்கியிருந்த
வீட்டில் மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். சேலம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் காவல்துறையினர் கடந்த ஜூன் இருபதாம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த
இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள செட்டிச்சாவடி பகுதியில்
வாடகைக்கு வீடு எடுத்து சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும்
தெரிய வந்தது. அவர்களிடமிகுந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி
செய்வதற்கான உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இயற்கையை அழிக்கும் விதமாக செயல்படுபவர்களை தடுக்க புதிய ஒரு இயக்கத்தை உருவாக்கி குரல் கொடுக்க திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழக கியூ பிரான்ச் காவல் துறையினர் நீதிமன்ற காவலில் எடுத்து நடத்திய
விசாரணையில், சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கபிலர் என்ற
வாலிபர் துப்பாக்கி தயாரிக்க துணையாக இருந்ததாக தெரிவித்ததால் அவரையும்
காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் தமிழக கியூ பிரான்ச்சிடம் இருந்து மத்திய புலனாய்வு முகமைக்கு
வழக்கு மாற்றப்பட்டது. இதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக மத்திய
புலனாய்வு முகமை சோதனையில் இறங்கியுள்ளது.

சேலம் செட்டிசாவடி பகுதியில் துப்பாக்கி தயாரிக்க வாடகைக்கு எடுத்த வீட்டில் காலை 6:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் வீட்டின் உரிமையாளரிடம் எப்பொழுது வீட்டிற்கு வாடகைக்கு வந்தார்கள்?ஏதாவது சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொண்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பொருட்களை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சேலம் சன்னியாசிகுண்டு எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.