தவெக கட்சியின் கொடியை அடுத்த மாதம் 12 தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது.
தளபதி என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் முறையாக பதிவு செய்துள்ளார். தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு படங்களை நடித்து கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கும் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதையே இலக்காக நிர்ணயித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக உணவகம், படிப்பகம், குறுதியகம், விழியகம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர்களை அழைத்து பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துவரும் விஜய், அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாநாடாக அமையும் என விஜய் கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது என இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 29 தேதி நடத்த, கட்சி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிள்ளது. மேலும், தவெக கொடி அடுத்த மாதம் 12 தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கட்சியின் தலைவர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிள்ளது.







