சென்னையில் நியூஸ் 7 தமிழின் பிரம்மாண்ட கல்வி கண்காட்சி தொடங்கியது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவையில் இரண்டு ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ், கல்வி கண்காட்சிகளை நடத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தாண்டு கொடிசியா அரங்கில் விமரிசையாக நடைபெற்ற கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்தன. மேலும், இந்தக் கண்காட்சி வாயிலாக உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இதையும் படியுங்கள் : கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் 40 இடங்கள் தான் கொடுப்பார்கள் – ராகுல் காந்தி!
இதைத் தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் இந்தாண்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கலில் பரிசு வழங்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற கண்காட்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மதுரையில் நடைபெற்ற கல்விக் கண்காட்சிகளுக்கு பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாபெரும் வரவேற்பு அளித்தன. அந்த வரவேற்பை தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் இன்றும், நாளையும் கல்வி கண்காட்சிக்கு திட்டமிட்டப்பட்டது.
அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கல்வி கண்காட்சியை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நியூஸ் 7 தமிழின் மூத்த பொறுப்பாசிரியர் எஸ்.சரவணன், பொறுப்பாசிரியர் குதுப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, “உயர்நிலைக்கு வரும் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. அதற்காக நன்றி; நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி எப்போதும் மக்களுக்கான நல்ல நிகழ்வுகளை மட்டுமே செயல்படுத்துகிறது” என்று தெரிவித்தார். இந்த கல்விக் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோருடன் கல்விக் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.