நியூஸ் 7 தமிழின் கோயில் விருதுகள் 2023 மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுது. இதில் சிறந்த கோயில்களை தேர்ந்தெடுத்து 7-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
நியூஸ் 7 தமிழ் நடத்தும் கோயில் விருதுகள் 2023 நிகழ்ச்சி மதுரையில் NMR சுப்புராமன் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கோயில்களை தேர்ந்தெடுத்து கோயில் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் துழாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை ஆராய்ந்து சிறந்த கோயில்களுக்கு கீழ்கண்ட பட்டியலில் உள்ள கோவில் விருதுகள் 2023 வழங்கப்பட்டன.
1) வழிபாட்டு வசதி விருது
கோவை மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயிலுக்கு “வழிபாட்டு வசதி விருது” வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
2) பழம்பெருமை விருது
மதுரையில் உள்ள புகழ்பெற்ற அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலுக்கு ”பழம்பெருமை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது
3) சுகாதாரம் விருது
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயிலுக்கு “சுகாதாரம் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
4) தேர் பராமரிப்பு விருது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் சமேத ரங்கமன்னார் திருக்கோயிலுக்கு ”தேர் பராமரிப்பு விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
5) பூஜை விருது
திருநெல்வேலி மாவட்டம் செப்பறையில் உள்ள அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயிலுக்கு “பூஜை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
6) பிரசாதம் விருது
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயிலுக்கு “பிரசாதம் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருகுமி ஆற்றல் அசோக் குமாருக்கு ”சேவை” பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நியூஸ் 7 தமிழின் கோயில் விருது 2023 விழாவில் பேசிய மதுரை ஆதீனம் தெரிவித்ததாவது..
”தொலைக்காட்சி வரலாற்றில் கோயிலுக்கு நியூஸ் 7 தமிழ் போல யாரும் விருது விழா நடத்தவில்லை. கோயில்களை பாதுகாக்க பலர் உயிரை துறந்துள்ளனர். மருது பாண்டியர்கள் காளையார்கோயிலை பாதுகாக்க தங்கள் உயிரை துறந்தனர். கோயில்களை பாதுகாத்து வழிபாடு நடத்த வேண்டும். எந்த தொலைக்காட்சியும் இதுபோன்று கோயில்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியது இல்லை.
சைவத்திற்கு முதல் கண் திருக்கோயில் ஆகும். தமிழகத்தில் திருக்கோயில் இருப்பதால்
வெளிநாட்டவர் தமிழ்நாட்டை தேடி வருகிறார்கள் ” என மதுரை ஆதீனம் தெரிவித்தார்.







