தமிழகத்தில் இன்று 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 30 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
பொதுவாகச் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வருடத்திற்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்துவது வழக்கம். இது போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 26 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வாகனங்கள் அதிகமாக வரும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.







