உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அந்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி என்.வி.ரமணா…

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அந்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி என்.வி.ரமணா பதவியேற்றார். 16 மாதங்களுக்கும் மேல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர் வரும் 26ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கிய அவர்,  உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித்தை அந்த பதவிக்கு நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.

இந்நிலையில் இந்த பரிந்துரையை ஏற்று நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். இந்த தகவலை அறிவிக்கையாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் 26ந்தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற்ற பின் 27ந்தேதி உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ்.லலித் பதவியேற்க உள்ளார்.

தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி உதய் உமேஷ் லலித்திற்கு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வாழ்த்து தெரிவித்துள்ளார். வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் நீண்ட அனுபவம் பெற்றுள்ள  உதய் உமேஷ் லலித், தனது தனது திறமையான தலைமையின் மூலம் இந்திய நீதித்துறையை மிகச்சிறந்த உயரத்திற்கு கொண்டு செல்வார் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.